விதைக்கும் பருவங்கள்

அடிப்படைகள்

சிவகாமி · 23/10/2018

“பருவத்தில் பயிர் செய்” என்பது பழமொழி. தமிழ்நாட்டில் கார், சம்பா, தாளடி, நவரை, பிசானம், போன்ற பருவங்கள் வழக்கில் உள்ளன. அவை இடத்துக்கு இடம் வேறுபடுகின்றன. பொதுவாக பின்கோடைப் பருவத்தில் பயிர் செய்து அறுவடை செய்யப்படும் பயிர் கார் அல்லது குறுவை என்று அழைக்கப்படுகிறது. இப்பருவம், ஆனி , ஆடி, ஆவணி ஆகிய மாதங்களை உள்ளடக்கியது ஆகும்.

அதன் பின்பு வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும் என்பதால் 100 அல்லது 11௦ நாட்களுக்குக் குறைவாக உள்ள பயிர்களே இப்பருவத்தில் விதைக்கப்படுகின்றன.ஆற்றில் வருகின்ற தண்ணீர் திருச்சி , தஞ்சாவூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் நேரத்தில் வரவில்லை என்றால் நீண்டகாலப் பயிரை விதைத்து நட்டு மழைக்காலம் முடியும்போது அறுவடை செய்கிறார்கள். இது சம்பா பருவம் என்று அழைக்கப்படுகிறது.

கார் அறுவடைக்குப் பிறகு பயிரின் அடிக்கட்டை நஞ்சை நிலத்தில் நிற்கிறது. அப்படி நிற்கும் அடித்தாளை மடக்கி உழுது அது அழுகிய பின் நடவு செய்யப்படுகிறது. தாள் உள்ளே புதைந்து இருப்பதால் இப்பருவம் தாளடி என்று வழங்கப்படுகிறது. சம்பா அல்லது தாளடி பருவம் முடியும்போது ஆரம்பிப்பது நவரைப் பருவம் கரூர்,விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இப்பருவம் வழக்கில் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் செய்யப்படும் நெல் சாகுபடி பிசானம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்தந்த பருவத்திற்கு ஏற்ற விதைகளை முன்னோர்கள் பல நெடுங் காலமாக தேர்வு செய்து விதைத்து அறுவடை செய்து வந்தார்கள்.

ஓர் ஆண்டுக் காலத்தை ஆறு பெரும் பொழுதாகப் பிரித்தார்கள்

  1. சித்திரை, வைகாசி – இளவேனில்
  2. ஆனி, ஆடி – முதுவேனில்
  3. ஆவணி, புரட்டாசி – கார் (மேகம்) காலம்
  4. ஐப்பசி, கார்த்திகை – கூதிர்காலம் (குளிர்காலம்)
  5. மார்கழி, தை – முன்பனிக்காலம்
  6. மாசி, பங்குனி – பின்பனிகளாம்

கடிகாரம் இல்லாத காலத்தில் கால நேரத்தை அளக்க நமது முன்னோர்கள் கற்றார்கள். வானத்தை அளந்தார்கள்.கோள்களின் கோள்களின் இயக்கங்கள் (நிலா, வெள்ளி) கொண்டு கால நேரத்தை கணக்கிட்டார்கள். இதுபோலவே கதிரவன் வரவால் தனது நிழல் நீளுவது, குறுகுவதைக் கொண்டு காலத்தைக் கணித்தார்கள்.